தில்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஓட்டிய கார் மோதி, சைக்கிளில் சென்ற 9 வயது சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி பல்கலைக்கழகத்துக்குள்பட்ட பாகினி நிவேதிதா கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் அனுபமா. நஜஃப்கர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அனுபமா ஓட்டிச் சென்ற கார், சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நிதேஷ் (9) என்ற சிறுவன் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த நிதேஷை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுபமா கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான்.
அனுபமா, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே காரை ஓட்டியதால் இந்த விபத்து நேரிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சாவ்லா பகுதி காவல் நிலையத்தில் அனுபமா சரணடைந்தார். அவர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 279 (அதிவேகமாக ஓட்டுதல்), 304ஏ (அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனுபமா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்றார் அந்த அதிகாரி.