நாடு முழுவதும் கடும் பனி காரணமாக ரயில்களின் வருகை, புறப்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டு வரும் சூழலில், அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.
நாடு முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக அளவு பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதன் காரணமாக, ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் கடுமையான காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
உதாரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான மூன்றே மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் ரயில்கள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு தாமதமாகி இருக்கின்றன.
மேலும், பனிப்பொழிவு காரணமாக 2016-17-ஆம் நிதியாண்டில் மட்டும் 3,700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த தாமதங்களைக் குறைக்க ரயில்வே துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வாரிய உறுப்பனர் முகமது ஜாம்ஷெட் கூறியதாவது:
பனியால் ஏற்படும் ரயில் காலதாமதம் என்பது இயற்கையானது; தவிர்க்க முடியாதது. ஆனால், ரயில்களின் தாமதத்துக்கு பனிப்பொழிவு மட்டுமே காரணமல்ல. போதிய உள்கட்டமைப்பு இல்லாததும் முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, ரயில் காலதாமதங்களைக் குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்புப் பாதைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரிப்பது; தானியங்கி சிக்னல்களை அதிக அளவில் அமைப்பது; ரயில்வே கடவுப்பாதைக்குப் பதிலாக சுரங்கப் பாதைகளை அமைப்பது, ரயில் நிலையங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பணிகளில் ரயில்வே துறை கவனம் செலுத்தி வருகிறது என்றார் அவர்.