தில்லி சப்ஜி மண்டி பகுதியில் குடிபோதையில் இருந்தவர்கள் காவலர்களுடன் தகராறு செய்தனர். அப்போது தகராறு செய்தவர்களுக்கு ஆதரவாக வந்த அவர்களின் நண்பர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடினர்.
இதன் விவரம் வருமாறு: வடக்கு தில்லி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ஊர்க்காவல் படையினர் 38 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு சப்ஜி மண்டி பகுதியில் பாதுகாப்புக்கான பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால், ஊர்க்காவல் படையினர் வெள்ளிக்கிழமை இரவு தங்குவதற்காக அருகே உள்ள இரவுக் குடில் பகுதியில் காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, ஊர்க்காவல் படையினரை அழைத்துச் செல்ல சப்ஜி மண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த அமித், சுரேஷ் ஆகிய இரு காவலர்கள் வந்தனர். அவர்களை அழைத்துச் செல்லும் வழியில் இரண்டு நபர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த காவலர் அமித், அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயன்றார்.
இந்நிலையில், குடிபோதையில் இருந்த நபர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதிக்கு வந்த அவர்களின் நண்பர்கள் அருகே இருந்த செங்கல்லை எடுத்து காவலர் அமித் தலையில் தாக்கினர். இதில் அவரது தலையில் ரத்தம் கொட்டியது. மேலும், அவரது காவல் சீருடையையும் அந்த நபர்கள் கிழித்து விட்டு தப்பியோடினர்.
இந்நிலையில், ஊர்க்காவல் படையினர் உதவியுடன் மீதமுள்ள ஒரு சிலரை மட்டும் காவலர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை அடையாளும் காணும் விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.