மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம்:தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்பு

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர்,  தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக அல்லாமல்,  மக்கள் நலப் பணியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை எப்படி முறைப்படுத்த முடியும்?' என்றார்.
 மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் வழக்குரைஞர் வில்சன் ஆஜராகி, "கடந்த 2008-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 179-இன்படியே மக்கள் நலப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு, திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் அரசியல் ரீதியாகப் பழித்தீர்க்கும் நோக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்த நீதிபதிகள், "அரசியல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்காலத் தடையை நீட்டிக்கிறோம்' என தெரிவித்தனர்.
பின்னணி: தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இதில், அவர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்கவிட்டால் ஆறு மாத சம்பளத்தை அளிக்கும்படியும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 2014, செப்டம்பர் 23-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com