தில்லிவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் குற்றம்சாட்டியுள்ளார்.
பவானா சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுரேந்தர் குமாருக்கு ஆதரவு கேட்டு அஜய் மாக்கன் பேசியதாவது:
தில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனால், பாமர மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தை ஆளும் அரவிந்த் கேஜரிவால் அரசும் விளம்பர அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தில்லிவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான பணிகளை இரண்டு அரசுகளும் மேற்கொள்ளவில்லை.
தில்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் போது, குடிசைப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டன. இதே தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், தற்போதைய வேட்பாளருமான சுரேந்தர் குமார் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் சுரேந்தர் குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஷோயீப் இக்பால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.