தில்லியில் வனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு தில்லியின் நேப் சராய் கிராமத்திலுள்ள வனப் பகுதியை பாதுகாப்பதற்காக தில்லி வனத் துறை சார்பில் சுற்றுச் சுவர் கட்டுப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த சுற்றுச் சுவரால், தங்களது குடியிருப்புக்கு செல்லும் பாதைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறி, நேப் சராய் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களது வீட்டுக்கு அருகே இருக்கும் நிலம், வனப் பகுதியின்கீழ் வராது எனவும், அந்த நிலத்தை நாங்கள் ஆக்கிரமித்திருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தால் அதனை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, தில்லியில் வனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"இயற்கையின் முக்கிய அம்சமே வனப் பகுதிகள்தான். தில்லியில் வனப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் வனப் பகுதிகள் இலக்காகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, பெரிய குற்றச் செயலாகும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட தம்பதியர் தங்களது குடியிருப்புக்கு சென்றுவருவதற்காக 5 அடி இடத்தை ஒதுக்கி கொடுக்கும்படி, தில்லி வனத் துறைக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். எனினும், இந்த உத்தரவு, வேறெந்த குடியிருப்புவாசிகளுக்கும் பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.