தில்லி முனிர்காவில் வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு கசிந்ததால் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
முனிர்காவில் ஒரு வீட்டில் சமையல் எரிவாயு கசிந்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாகச் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த வீட்டில் வசித்து வரும் ராஜ்குமார், விமலா, அங்கூதி, லக்ஷ்மண், இலியாஸ், கலு ஆகியோர் தீக்காயமடைந்தனர். இதில் விமலாவுக்கு 70 சதவீதம், மற்றவர்களுக்கு 20-30 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, தென்கிழக்கு தில்லி, முஜாஹிதீன் பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றார் அவர்.