ஆனந்த் விஹார், கெளசாம்பி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனந்த் விஹார், கெளசாம்பி ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்தும், போக்குவரத்து நெரிசல், சுகாதாரம் ஆகியவை குறித்தும் தில்லி துணைநிலை ஆளுநர் (எல்ஜி) அனில் பய்ஜால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இது தொடர்பாக விளக்கங்களை சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் புரி லால் அளித்தார்.
ஆனந்த் விஹார், கெளசாம்பி பேருந்து நிலையங்கள், ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், காற்று மாசுவைத் தடுக்க தண்ணீர் தெளிக்கவும், பொது இடங்களில் குப்பைகளை எரிப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கைலாஷ் கெலாட், தில்லி அரசின் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர், உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர், நொய்டாவின் தலைமை செயல் அதிகாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நரெய்ன், தில்லி மாநகராட்சிகளின் ஆணையர்கள், தில்லி போக்குவரத்துக் காவல் துறை சிறப்பு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.