தில்லி மாநகராட்சிகள் வீட்டு வரியை உயர்த்தத் தேவையில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் 2017-18ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை முறையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தில்லி மாநகராட்சிகளின் பட்ஜெட்டில் உத்தேசித்துள்ள வரி உயர்வுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும்,கவுன்சிலர்
களும், மாநகராட்சிகளின் எதிர்க் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி மாநகராட்சிகளின் வீட்டு வரி உயர்வு குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரை பக்கத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
தில்லி மாநகராட்சிகளில் வீட்டு வரியை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஊழலை மட்டுப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவை.
ஊழலை ஒழித்தாலே, ஏராளமான நிதியைச் சேமிக்க முடியும்.
வீட்டு வரியை உயர்த்த வேண்டியிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.