தில்லியின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தலைநகர் தில்லியிலும், தேசிய தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) உள்ள குர்கான், ஃபரீதாபாத், காஜியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் கனாட் பிளேஸ், ஏபிஜே அப்துல் கலாம் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாரத்தின் முதல் நாள் என்பதால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.
நகரில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுமார் 20 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகரில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.
செவ்வாய்க்கிழமையன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.