புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி), பிரபல நட்சத்திர ஹோட்டல் லீ மெரீடியன் செலுத்த வேண்டிய கட்டண நிலுவைத் தொகையை வசூலிப்பவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க என்டிஎம்சி உத்தரவிட்டுள்ளது.
தில்லியின் லூட்யன்ஸ் தில்லி பகுதியில் என்டிஎம்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டல், ரூ.523 கோடி கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்துக்காக, அதன் உரிமம் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, என்டிஎம்சி தலைவராக ஜலஜ் ஸ்ரீவஸ்தவா பதவி வகித்த காலகட்டத்தில், லீ மெரீடியன் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து கட்டண நிலுவைத் தொகையை வசூலிப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் மூலம் என்டிஎம்சிக்கு ரூ.400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.தற்போது மத்திய வேளாண் துறை கூடுதல் செயலராக இருக்கும் ஸ்ரீவஸ்தவா, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தான் தவறாக சிக்க வைக்கப்படுவதாக கூறினார்.
இந்நிலையில், ரூ.523 கோடி கட்டண நிலுவைத் தொகையை வசூலிப்பதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை என்டிஎம்சி மேற்கொள்ளும் என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.