தில்லியின் ஷாதரா பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி கேஸ் அடுப்பின் மீது தவறி விழுந்ததில் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ஆயத் என்ற அந்த சிறுமி காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அவர் தனது சகோதரருடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரே அறை மட்டுமே உள்ள அந்த வீட்டில் அவரது மூத்த சகோதரி குடும்பத்தினருக்காக தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒடியாடி விளையாடிக் கொண்டிருந்த ஆயத், எரிந்துகொண்டிருந்த கேஸ் அடுப்பின் மீது தவறி விழுந்தார். பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த தேனீர் ஆயத்தின் மீது கொட்டியது. இதில் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக குரு தேஜ் பஹதூர் மருத்துவமனையில் ஆயத் அனுமதிக்கப்பட்டார் எனினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் சந்தேகத்துக்கிடமான வகையில் இருப்பதாக விசாரணையில் தெரியவரவில்லை என்று போலீஸார் கூறினர்.