தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அரசு துறைகளில் 70 சதவீதம் அளவுக்கு ஊழல் குறைந்துள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
தலைநகரில், ஓய்வூதியதாரர்கள் சங்கமான தில்லி வித்யுத் போர்டின் (டிஏபி) 31-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் கேஜரிவால் பேசியதாவது:
தில்லி அரசை பணியாற்ற விடாமல் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைத் தாண்டி பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சாதாரண மனிதர்களுக்கான அரசாக, தனியார் மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை உள்பட சில பொது நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அரசு நிர்வாகத்தில் நாங்களும் ஊழலில் ஈடுபட்டதில்லை. அரசு அதிகாரிகளையும் ஈடுபடவிட்டதில்லை. தில்லி அரசு துறைகளில் ஊழல் 100 சதவீதம் ஒழிந்துவிட்டது என்று கூறவில்லை. ஆனால், அது 60 முதல் 70 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களில் இருந்து நிதியை சேமித்து, அதை மக்கள் நலத் திட்டங்களில் பயன்படுத்துகிறோம்.
இதனிடையே, டிஏபி ஓய்வூதியதாரர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் மருத்துவ சிகிச்சை பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தில்லியில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள் உரிய நேரத்தில் ஓய்வூதியத்துக்கான நிதியை வைப்பு செய்வதில்லை. அதனாலேயே ஓய்வூதியத்தை வழங்குவதில் தாமதமாகிறது.
ஓய்வூதியத்துக்கான நிதியானது, அதற்குறிய அறக்கட்டளையில் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் வைப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் கேஜரிவால் கூறினார்.