பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக தில்லி பாதுகாப்பற்ற நகரமென 50 சதவீத தலைநகர் வாசிகள் உணர்கின்றனர் என தில்லி நீதிமன்றம் தெரிவித்தது.
பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இவ்வழக்கு குறித்த விவரம் வருமாறு:
இந்தச் சம்பவம் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி தென்கிழக்கு தில்லியில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் படி, அவர் பணி முடிந்து தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த சுனில் குமார் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) அந்தப் பெண் மீது மோதியதுடன், தேவையின்றி தொட்டு, தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுனில் குமார் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு சுனில் குமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சுனில் குமார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்து வந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி லோகேஷ் குமார் சர்மா புதன்கிழமை அளித்தி தீர்ப்பு வருமாறு:
தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், தில்லி பாதுகாப்பற்ற நகரமாக இருப்பதாக தலைநகர் வாசிகளில் 50 சதவீதத்தினர் உணர்கின்றனர். நாட்டின் தலைநகரான தில்லியில் நாளுக்கு நாள் தெருக்களிலும், சாலைகளிலும் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்களால் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளது. அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு இரக்கம் காட்டப்பட்டால், அது சமூகத்துக்கு தவறான கருத்தை தெரிவிக்கும். எதிர்காலத்தில் அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோரை அச்சப்பட வைப்பதற்கு பதிலாக, அவர்களை ஊக்குவிப்பதாக அமையும். எனவே, சுனில் குமாருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறேன் என்று லோகேஷ் குமார் சர்மா தனது தீர்ப்பில் கூறினார்.