உத்தரப் பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள 20 அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
புதிதாக பதவியேற்ற 47 அமைச்சர்களில் மொத்தம் 35 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
தில்லியைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தின் அமைச்சர்களாக பதவியேற்ற மொத்தம் 47 பேரில் 44 பேருடைய வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தோம்.
அவர்களில் 20 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 35 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மொத்த சொத்த மதிப்பு ரூ.71 லட்சம் ஆகும்.
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி. 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் 7 அமைச்சர்கள் ஆவர்.
37 பேர் பட்டதாரிகள் அல்லது முதுநிலை பட்டதாரிகள் ஆவர்.
47 அமைச்சர்களில் மொத்தம் 3 பேர் பெண்கள்.
பஞ்சாபில் மொத்தம் 10 அமைச்சர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.