தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இச்சம்பவம் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் நிகழ்ந்தது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பாலத்திலிருந்து கீழே விழுவதை அங்கிருந்த பாதசாரிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில் நிலைய பாதுகாவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பிசிஆர் வாகனத்தில் அந்தப் பெண்னை ஜசோலா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அந்தப் பெண் கீழே விழுந்தது விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என விசாரித்து வருகிறோம். அவரை அடையாளப்படுத்தும் எந்தவொரு அட்டையோ, தற்கொலைக் குறிப்போ அவரிடம் இல்லை.
அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்று போலீஸார் கூறினர்.