தில்லியில் அதிவேகமாக கார் ஓட்டியதாக நிகழாண்டு இதுவரையில் 37 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் சில தினங்களுக்கு முன் ஒரு பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், அந்த பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் நால்வர் உயிரிழந்தனர்.
இதேபோல, கஷ்மீரி கேட் பகுதியில் சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவன் அதிவேகமாக காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபோன்ற விபத்துகளால், தில்லியில் சாலை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அதிவேகமாக வாகனங்களை இயக்குவதுதான், சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கட்டுப்பாடான வேகத்தில் வாகனங்களை இயக்கினால், பெருமளவில் விபத்துகளை குறைக்க முடியும்.
தில்லியில் அதிவேகமாக கார் ஓட்டியதாக நிகழாண்டு தொடக்கம் முதல் கடந்த 15-ஆம் தேதி வரை சுமார் 37,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாததற்காக, சுமார் 7 லட்சம் வாகன ஓட்டிகள் அபராத நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
சீட் பெல்ட் அணியாமல் கார்களை ஓட்டியதாக சுமார் 2 லட்சம் பேரும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சுமார் 9,259 பேரும் இதே காலகட்டத்தில் அபராதத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை
விபத்துகளில் 37 சதவீத விபத்துகளுக்கு கட்டுப்பாடற்ற வேகமே காரணம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியை பொருத்தவரை கடந்த ஆண்டு 7,375 சாலை விபத்துகள் நேரிட்டன. நிகழாண்டு இதுவரை நேர்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 2,514.
கடந்த ஆண்டில் அதிவேகமாக கார் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 86 ஆயிரம் ஆகும் என்றார் அந்த அதிகாரி.