தெற்கு மேற்கு தில்லி உணவு வழங்கல் வட்ட அலுவலகத்தில் தில்லி உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தில்லி அரசின் உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு வட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரியின் மூலம் இந்த அலுவலகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவிப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். உரிய நேரத்தில் குறிப்பிட்ட உணவுப் பொருள்களான கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென் மேற்கு தில்லி பகுதியில் மட்டியாலாவில் உள்ள உணவு வழங்கல் வட்ட அலுவலகத்தில் அமைச்சர் இம்ரான் ஹுசேன், உணவு- குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சிறப்பு ஆணையருடன் சென்று இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது, பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக வட்ட அலுவலகத்தில் பணியில் இருக்கும் தொடர்புடைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் இம்ரான் ஹுசேன் உத்தரவிட்டார். மேலும், தவறிழைத்த நியாயவிலைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகராத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் தனக்கு சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டார் என உயரதிகாரி தெரிவித்தார்.