கல்லூரி வளாகத்தில் யாகம்: ஐஐஎம்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதழியல் கல்விக்கான இந்திய நிறுவனத்தின் (ஐஐஎம்சி) வளாகத்தில் யாகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கும், கருத்தரங்கத்திற்கு சர்ச்சைக்குரிய ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.பி.கலூரி அழைக்கப்பட்டதற்கும்

இதழியல் கல்விக்கான இந்திய நிறுவனத்தின் (ஐஐஎம்சி) வளாகத்தில் யாகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கும், கருத்தரங்கத்திற்கு சர்ச்சைக்குரிய ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.பி.கலூரி அழைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழு ஒன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஐஐஎம்சி வளாகத்தில் சனிக்கிழமை 'நடப்புக் கண்ணோட்டத்தில் தேசிய இதழியல்: ஊடகம் மற்றும் பொதுவான நம்பிக்கை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி கல்லூரி வளாகத்தில் 2 மணி நேரம் யாகம் நடத்துதற்கு கல்லூரி இயக்குநர் கே.ஜி.சுரேஷ் அனுமதி வழங்கியிருந்தார். இந்நிலையில், கருத்தரங்கத்தில் பங்கேற்க தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய சில மாணவர்கள், ஐஐஎம்சி வளாகத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், யாகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கும், கருத்தரங்கில் பங்கேற்க ஐபிஎஸ் அதிகாரி கலூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நக்ஸல் பாதிப்பு அதிகம் இருந்த சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருந்த கலூரி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்னர். இதையொட்டி, தில்லி காவலர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஐஐஎம்சி கல்லூரி வளாகத்தின் வெளியே காலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கல்லூரி வாசலில் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த போலீஸார், ஐஐஎம்சி சனிக்கிழமை மட்டும் மூடப்படுவதாக கூறினர்.
'மதச்சார்பின்மையை கற்றுத் தரத் தேவையில்லை': இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐஐஎம்சி இயக்குநர் கே.ஜி.சுரேஷ், தனக்கு எவரும் மதச்சார்பின்மையை கற்றுத் தரத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, ஐஐஎம்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கருத்தரங்கத்திற்கு வரவிடாமல் கலூரியை ஏன் தடுக்க வேண்டும்? அவர் கலந்துகொள்ளும் இந்த கருத்தரங்கிற்கு ஊடகத்தினரும் வருகின்றனர். அவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பட்டும்.
ஒவ்வொரு மதமும் தனக்குரிய சடங்குகளை செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற சடங்குகளால் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டதாக ஒரு பேச்சு உள்ளது.
ஆனால், இந்த நாட்டில் முன்பு அனைத்து மதங்களையும் நாம் ஆதரித்தோம் என்பதை முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதச்சார்பின்மை குறித்து எனக்கு யாரும் கற்றுத் தரத் தேவையில்லை.
நிகழ்ச்சிகளின் போது விளக்கேற்றுவது, பூமி பூஜை போன்ற வழக்கங்கள் கடைபிடிக்கப்படும்போது, யாகம் ஏன் நடத்தக் கூடாது? முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள். சீக்கியர்கள் தங்களது மதச் சடங்குகளை செய்கின்றனர்.
சில ஊடகங்கள் மாஃபியாக்களைப் போல செயல்படுகின்றன. ஆர்எஸ்எஸ் ஒதுக்கிய சில பணிகளைச் செய்ததாலேயே என்னை ஆரஎஸ்எஸ் ஆதரவாளனாக சித்திரிக்கின்றனர் என்று சுரேஷ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com