கொள்ளை வழக்கில் பொது மக்களே பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த கைதி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பினார். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நொய்டா எஸ்எஸ்பி மணீஷ் சக்சேனா கூறுகையில், "சலேரா கிராமத்தில் கொள்ளையில் ஈடுபட்டதாக ராபின் என்பவரை கடந்த 11-ம் தேதி அந்த கிராம மக்கள் பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர். மருத்துவ பரிசோதனைக்காக ராபினை மாவட்ட மருத்துவமனைக்கு இரண்டு காவலர்கள் கொண்டு சென்றனர். அங்கு தனக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் ராபின் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராபினை கழிப்பறைக்கு அனுப்பி வைத்து காவலர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் ராபின் திரும்ப வராததையடுத்து, கழிவறைக்குள் காவலர்கள் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கழிவறையின் ஜன்னல் வழியாக ராபின் தப்பித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர் ஜெய்கின்டர் செக்டார் 20-இல் புகார் அளித்துள்ளார்' என்றார்.