3 ஆண்டுகளில் மாசுவைக் குறைக்க எடுத்த நடவடிக்கை என்ன? தில்லி அரசுக்கு மனோஜ் திவாரி கேள்வி

தலைநகரில் மூன்று ஆண்டுகளில் மாசுவைக் குறைக்க ஆம் ஆத்மி அரசு  எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைநகரில் மூன்று ஆண்டுகளில் மாசுவைக் குறைக்க ஆம் ஆத்மி அரசு  எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:  
தில்லியில்  மூன்று ஆண்டுகளில் ரூ.775 கோடிக்கு மேல் சுற்றுச்சூழல் வரி தில்லி அரசால் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாசுவைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் தில்லி அரசு எடுக்கவில்லை. போதுமான நிதி ஆதாரங்கள் இருந்தபோதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தில்லி அரசு தோல்வியடைந்துவிட்டது. 2015,  2016-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக தில்லி அரசு நிதியைச் செலவிட்டபோதிலும் இறுதியாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்த நடவடிக்கை பொருத்தமற்றது என கண்டறியப்பட்டுள்ளது.
வாகனக் கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் மக்களை கேஜரிவால் அரசு ஏமாற்றியுள்ளது.  நிகழாண்டில்  மாசுப் பிரச்னையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும்,  கேஜரிவால் அரசால் வசூலிக்கப்பட்ட ரூ.775 கோடி  சுற்றுச்சூழல் தூய்மைக்காக உருப்படியாக ஏதும் செலவிடப்படவில்லை.
சுற்றுச்சூழல் பணி எனும் பெயரிலான நிதியானது முதல்வர் கேஜரிவாலின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.  ஆகவே, மக்களிடமிருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழல் வரி விவரங்கள் குறித்தும்,  தலைநகரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தூய்மைக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக கேஜரிவால் அரசு தெரிவிக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com