தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் இருவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது:
தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் போலீஸார், கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சந்தேகத்துக்கிடமான ஆள்கள் நடமாட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து நாள் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை விமான நிலையத்திற்கு வெளியே இருவர் சந்தேகப்படும்படி நடமாடியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது. இதைப் பார்த்த கண்காணிப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பிக்பாக்கெட் திருடர்களான அவர்கள், ஜி.முகமது, எம்.ஹாஸன் என அடையாளம் காணப்பட்டது.
விமான நிலையத்திற்குள் பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ள டிடிசி பேருந்தில் பயணம் செய்த விமானப் பயணி எஸ்.சர்மாவிடம் இருந்து ரொக்கம் ரூ.3,650, துபாய் நாட்டுக் கரன்சி 90 திர்காம் ஆகியவை அடங்கிய பர்ஸை அவர்கள் இருவரும் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
துபாயில் இருந்து வந்த சர்மா, லக்னெளவுக்கு செல்வதற்காக வேறெரு டெர்மினலுக்கு பேருந்தில் செல்லும் போது இத்திருட்டு நடந்துள்ளது. பிடிபட்ட இருவரும் தில்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.