தேசியத் தலைநகர் வலயம் காஜியாபாத் அருகே உள்ள ஜாவ்லி கிராமத்தில் 28 வயது இளம்பெண் துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் துர்கேஷ் குமார் புதன்கிழமை கூறியதாவது:
காஜியாபாத் லோனி பகுதியில் ஜாவ்லி கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை அவரது வீடு அருகே சக நண்பர்கள் திங்கள்கிழமை இரவு விட்டுவிட்டுச் சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணை துப்பாக்கிமுனையில் மிரட்டி மோட்டார்சைக்கிளில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பெண் காவல் துறை அவசர உதவி எண்ணான "100'-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.