போலி காசோலையைத் தயாரித்து ஓக்லாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை தில்லி, உத்தர பிரதேச மாநிலங்கள் இணைந்த தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போலி காசோலையைத் தயாரித்து அடுத்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெற்று மோசடி நடைபெற்று வருவதாக காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக தில்லி தென்கிழக்கு மாவட்ட போலீஸாரும், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அதிவிரைவுப் படை போலீஸாரும் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தில்லி ஓக்லா தொழிற்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து
போலியாக தயாரிக்கப்பட்ட காசோலை மூலம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது ஒரே காசோலையின் எண், கணக்கு எண், நிறுவனத்தின் பெயர் போன்று போலியாக அச்சடிக்கப்பட்ட காசோலை மூலம் இந்த பணம் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸ் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அலகாபாதில் உள்ள வங்கியின் கிளையில் செயல்படும் ஒருவரது கணக்கிற்குப் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மோசடியில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மோசடியின் முக்கிய மூளையாக ஷோயப் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும், இவரது கூட்டாளியான தில்லியைச் சேர்ந்த ஆகாஷ், போலி காசோலையைத் தயாரிப்பதற்கு உதவியுள்ளார். ஷோயப் தனது நம்பகமான ஆள்களின் வங்கிக் கணக்குகளில் காசோலைகளைச் செலுத்தி பணத்தை பெற்று மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் கூறினர்.