ரோஹிணியில் பேருந்து நிலையம் அமைக்க தில்லி அரசுக்கு 12 ஏக்கர் நிலம் வழங்கியது டிடிஏ

தில்லி ரோஹிணியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தில்லி அரசுக்கு 12 ஏக்கர் நிலத்தை தில்லி வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தில்லி ரோஹிணியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தில்லி அரசுக்கு 12 ஏக்கர் நிலத்தை தில்லி வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தில்லியில் பொதுப் போக்குவரத்து சேவையில் தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகள்  பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது இப்பிரச்னையை எழுப்பி வருகின்றன. பேருந்துகளை நிறுத்துவதற்கு போதுவான இடவசதி  இல்லாததன் காரணமாகவே பேருந்துகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேருந்து பணிமனைகளை அமைப்பதற்கு 135 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதற்கு தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ)  உத்தரவிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு  தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக  கடிதமும் எழுதியிருந்தார்.
அதில், தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் மூலமும், கிளஸ்டர் திட்டத்தின் மூலமும் தில்லியில் சுமார் 5,594 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  தில்லிக்கு 11,000 பேருந்துகள் தேவை என்ற நிலை உள்ளது. இவற்றை நிறுத்துவதற்கு சுமார் 460 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால்,  இப்போது 257 ஏக்கர் நிலம்தான் அரசின் வசம் உள்ளது. தற்போதைய நிலையில் சுமார் கூடுதலாக 2,000 பேருந்துகளை நிறுத்தும் வகையில், பணிமனை அமைப்பதற்கு  தில்லி அரசிடம் போதிய நிலம் உள்ளது.  பேருந்து பற்றாக்குறையைப் போக்குவதற்காக கூடுதல் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தில்லி அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தில்லி போக்குவரத்து நிறுவனம் மூலம் 1000 பேருந்துகளையும், கிளஸ்டர் திட்டத்தின் மூலம் 1000 பேருந்துகளையும் கூடுதலாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரவும் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அந்தக் கடிதத்தில் கெலாட் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பேருந்துகளை நிறுவதற்காக தில்லி வளர்ச்சி ஆணையம் 12 ஏக்கர் நிலத்தை (4.9 ஹெக்டர்) வழங்க இருப்பதாக  அமைச்சர் கைலாஷ் கெலாட் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதன்படி, வடமேற்கு தில்லியில் உள்ள ரோஹிணி செக்டார் 37-இல் சுமார் 12  ஏக்கர்  நிலத்தை தில்லி வளர்ச்சி ஆணையம் தில்லி அரசுக்கு திங்கள்கிழமை ஒதுக்கியுள்ளது.  இதற்கு தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு அமைச்சர் கைலாஷ் கெலாட் நன்றி தெரிவித்துக் கொண்டார். 
மேலும், தில்லியில் பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு கூடுதல் நிலங்களை டிடிஏ வழங்கும் என்று நம்புவதாகவும் தனது சுட்டுரையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com