தில்லி ரோஹிணி மாவட்டம், பேகம்பூரில் டாக்ஸி ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனியார் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு ரோஹிணி செக்டார்-24 பகுதியில் டாக்ஸியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஒரு கார் தாறுமாறாக ஓட்டிவரப்பட்டது. அந்தக் கார் சங்கர் ஓட்டிச் சென்ற டாக்ஸி முன் நின்றது. இதையடுத்து, தாம் செல்வதற்கு வழிவிடுமாறு அந்தக் காரில் இருந்தவர்களிடம் சங்கர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக சங்கருக்கும் காரில் வந்த நான்கு பேர் கும்பலுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, காரில் இருந்தவர்கள் சங்கரை கட்டை, இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கினர். மேலும், டாக்ஸியின் கண்ணாடிகளையும் உடைத்தனர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சங்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது பேகம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தேடி வருவதாக போலீஸார் கூறினர்.