மெட்ரோ ரயில் கட்டணத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் உயர்த்தக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. இதனை மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சஞ்சீவ் ஜா, ஜர்னைல் சிங், மனோஜ் குமார் ஆகியோர் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவர் மங்கு சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், "தில்லி மெட்ரோ ரயில் சட்டம் - 2002-ன் படி மெட்ரோ ரயில் கட்டணம் நிர்ணயிக்கும் குழுவின் முடிவு மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற கட்டண நிர்ணயக் குழுவின் கூட்டத்தில், கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முறையிடப்பட்டது. மேலும், 6 மாதங்களில் இரண்டு முறை மெட்ரோ கட்டணத்தை உயர்த்துவது மெட்ரோ சட்டத்துக்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் கோரிக்கையை பரிசீலிக்காமல் மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு எடுக்கக் கூடாது. இதனை மீறி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அதிகபட்சம் ரூ. 10 வரை உயரும். தற்போது, 2 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய ரூ. 10 எனவும், 2-5 கி.மீ. வரை ரூ. 15 எனவும், 5 -12 கி.மீ. வரை ரூ. 20 எனவும், 12-21 கி.மீ. வரை ரூ. 30 எனவும், 21-32 வரை ரூ. 40 எனவும், 32 கி.மீ. மேல் ரூ. 50 எனவும் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் உயர்த்தப்பட்டால் 2-5 கி.மீ. வரை ரூ. 20ஆகவும், அதற்கு அடுத்த உள்ள கட்டணங்களில் தலா ரூ. 10 அதிகரிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.