மாருதி கார் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு

தேசியத் தலைநகர் வலயம் குருகிராம் பகுதியில் உள்ள மாருதி சுஸுகி கார் தொழிற்சாலைப் பகுதியில் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியத் தலைநகர் வலயம் குருகிராம் பகுதியில் உள்ள மாருதி சுஸுகி கார் தொழிற்சாலைப் பகுதியில் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:  குருகிராம், மானேசர் பகுதியில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தொழிற்சாலைஅமைந்துள்ளது. இதன் வளாகப் பகுதியில் வியாழக்கிழமை காலை சிறுத்தை கண்டறியப்பட்டது.  ஆலையின் என்ஜின் தயாரிப்புப் பிரிவுப் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை நடமாடுவதை அங்கு பணியில் இருந்து பாதுகாவலாளிகள் கண்டனர்.  இதைத் தொடர்ந்து,  காவல் துறையினரும், வனத் துறையினரும் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர்.  மேலும்,  காலை வேளையில் பணியாற்றுவதற்காக ஆலைக்கு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆலையின் வெளியே நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களும் ஆலையை விட்டு வெளியே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
 இதையடுத்து,  ஆலைப் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  எனினும், சிறுத்தை எங்கு பதுங்கியிருக்கிறது என்பது கண்டறியப்படவில்லை.
தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.  நிகழாண்டு ஏப்ரலில் குருகிராம் மாவட்டம் சோனாவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சிறுத்தை புகுந்து ஐந்து பேரை கடித்து குதறிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com