தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 2015-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்த நீல நிற "வேகன்-ஆர்' கார், தலைமைச் செயலகத்தில் இருந்து வியாழக்கிழமை காணாமல் போனது.
தலைமைச் செயலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கார், நண்பகல் சுமார் 1 மணி அளவில் காணாமல் போனதாக போலீஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரையில், "போலீஸாரின் கவனம் எங்கு உள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தக் காரை வெளிநாடு வாழ் இந்தியரான குந்தன் சர்மா என்ற பொறியாளர் கடந்த 2013 ஜனவரியில் கேஜரிவாலுக்கு பரிசாக அளித்தார். அப்போது முதல் அந்தக் காரை இடைவிடாது பயன்படுத்தி வந்த கேஜரிவால், 2014-ஆம் ஆண்டு தில்லி காவல்துறைக்கு எதிரான போராட்டத்தின்போது அந்தக் காரிலேயே உறங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். தில்லி சட்டப்பேரவை தேர்தலின்போது அந்தக் காரில் சென்று பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால், விஐபி கலாசாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில், தாம் முதல்வரான பிறகும் அந்தக் காரையே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.