தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் திடக் கழிவு மேலாண்மைக்காக தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் திடக் கழிவு மேலாண்மைக்காக தலா ரூ.100 கோடியை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அத்துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதி தில்லியின் மூன்று மாநகராட்சிகளிலும், குப்பை சுத்திகரிப்பு நிலையங்களிலும் 670 டன்கள் உயிரிக் கழிவுகளை சுத்திகரிப்பதை விரைவுபடுத்த உதவியாக இருக்கும். அதேபோன்று, சாலை அமைப்பதற்கு காஜிப்பூர் பகுதியில் இருந்து குப்பைகளை எடுத்துச் செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், காஜிப்பூர், பலஸ்வா, ஓக்லா ஆகிய பகுதிகளில் நிலவும் குப்பை பிரச்னையில் இருந்து தில்லியை விடுவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதை புரிந்து கொள்ள முடியும்.
நிதிப் பிரச்னை இருந்த போதிலும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் தலைநகரில் குப்பை பிரச்னை இல்லாத நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றார் மனோஜ் திவாரி.