விலங்குகளுக்கு மயக்கமளிக்கும் இயந்திரம்: தில்லி உயிரியல் பூங்காவில் அறிமுகம்

விலங்குகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது பயன்படுத்துவதற்கான மயக்கமளிக்கும் இயந்திரம், தில்லி உயிரியல் பூங்காவுக்கென முதல் முறையாக வாங்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது பயன்படுத்துவதற்கான மயக்கமளிக்கும் இயந்திரம், தில்லி உயிரியல் பூங்காவுக்கென முதல் முறையாக வாங்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது விலங்குகளுக்கு மயக்கம் அளிக்க வழங்கப்படும் மருந்துகள், அவற்றுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், அதிலிருந்து விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு வாயு (கேஸ்) அடிப்படையிலான இந்த மயக்கமளிக்கும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தில்லி உயிரியல் பூங்கா இயக்குநர் ரேணு சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லி உயிரியல் பூங்கா, மத்திய பூங்கா ஆணையம் ஆகியவை அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவுடன் இணைந்து பயிற்சிப் பட்டறை நடத்திய நிலையில், இந்த மயக்கமளிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிப் பட்டறை கடந்த 11 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சிப் பட்டறையின்போது, வாயு அடிப்படையிலான மயக்கமளிக்கும் இயந்திரத்தை கையாளும் பயிற்சி நாட்டில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்களைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான பயிற்சிகளை, ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா, புத்தன் புகழேந்தி, அந்தோணி கோல்போர்ன் ஆகியோர் அடங்கிய குழு வழங்குகிறது என்று ரேணு சிங் கூறினார்.
இதுகுறித்து, ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவின் இனப்பெருக்க ஃபிஸியாலஜஸ்ட் புத்தன் புகழேந்தி கூறியதாவது:
விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும்போது அவற்றை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் மயக்க மருந்துகள் எப்போதும் அவற்றுக்கு ஏதேனும் ஒரு பக்க விளைவை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. அத்துடன் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவை கண் விழிக்க அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரையில் ஆகிறது.
ஆனால், மயக்கமளிக்கும் இயந்திரத்தின் மூலம் விலங்குகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மேலும், அறுவை சிகிச்சை முடிந்து அந்த இயந்திரம் நிறுத்தப்பட்டவுடனேயே, அவை சுயநினைவுக்குத் திரும்புகின்றன. பொதுவாக இந்த முறை பூனைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதை தற்போது இந்திய உயிரியல் பூங்காக்களிலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறோம். மயக்கமளிக்கும் இயந்திரம் ஒன்றின் விலை, இந்திய மதிப்பில் ரூ.6 லட்சம் வரையில் இருக்கும் என்று புத்தன் புகழேந்தி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com