தேசியத் தலைநகர் வலயப் பகுதியான காஜியாபாதில் உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட மாணவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி மோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதில், அவர்களது அண்டை வீட்டைச் சேர்ந்த நபர் அந்தச் சிறுமியை கடத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கல்சீனா கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டப் பகுதியில் அந்த மாணவியின் சடலம் வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அதை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அண்டை வீட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கூற முடியும். இதனிடையே, இந்த சம்பவத்தில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக மோதி நகர் காவல் நிலைய எஸ்ஹெச்ஓ சஞ்சய் குமார் போலீஸ் லைன்ஸ் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். போலீஸ் போஸ்ட் பொறுப்பாளரான சுதிர் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் கூறினர்.