தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் 'பெரியார்' ஈ.வெ.ராமசாமியின் பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த 'பெரியார்' ஈ.வெ.ராமசாமியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் டிடிஇஏ பள்ளிகளில் இவரது பிறந்த தின விழா நடைபெற்றது.
இதையொட்டி, பெரியாரின் திருவுருவப் படத்திற்கு அந்தந்தப் பள்ளிகளின் முதல்வர்கள் ஹரிகிருஷ்ணன் (மோதிபாக்), ராஜி கமலாசணன் (ஜனக்புரி), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), காயத்ரி (மந்திர்மார்க்) , சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு, பூசாசாலை) ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் உரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் இடம் பெற்றது.
மோதிபாக் பள்ளி மாணவர்கள், பெரியாரின் கொள்கைகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தியதோடு அக்கருத்துகளை வாய்மொழியாகவும் எடுத்துரைத்தனர்.
'சாதி, மத, இனவேறுபாடின்றி அனைவரும் பழகி ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்' என்று மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.