தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள நொய்டாவில் பிபிஓ நிறுவனத்தில் பணி புரியும் பெண்ணை, காரில் கடத்தி பலாத்காரம் செய்து சாலையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நொய்டா காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
நொய்டா கோல்ஃப் கோர்ஸ் பகுதியில் பிபிஓ நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோல்ஃப் கோர்ஸ் மெட்ரோ நிலையம் அருகே டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தபோது அவர் அருகே கார் ஒன்று நின்றுள்ளது.
அதிலிருந்து ஒருவர் இறங்கி அப்பெண்ணை அணுகி வழி கேட்டுள்ளார். அந்த நபரிடம் வழி குறித்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காரில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி கடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்து அக்ஷர்தாம் அருகே சாலையில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் நொய்டா 39-ஆவது செக்டார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். இச்சம்பவம் பணிக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.