தில்லி தலைமைச் செயலகத்தில் 2 அடி நீள உடும்பு சனிக்கிழமை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறை பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு உடும்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனவிலங்கு மீட்பு அமைப்பின் நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன் கூறுகையில், 'தில்லி சட்டப்பேரவையில் உள்ள தானியங்கி கதவில் உடும்பு ஒன்று சிக்கிக் கொண்டது. 2 அடி நீளம் உள்ள அந்த உடம்பை பத்திரமாக மீட்டோம்.
இந்த உடும்பால் மனிதர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது. இவற்றில் விஷத்தன்மை கிடையாது. காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதாலும், மனிதர்களின் வாழ்விடங்கள் விரிவடைந்து கொண்டே போவதாலும் இதுபோன்ற விலங்குகள் உணவு மற்றும் வாழ்விடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருகின்றன.
இந்த வகை உடும்புகளின் மாமிசத்தை உண்டால் மனிதர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையில் கொல்லப்படுகின்றன.
தில்லி தலைமைச் செயலகத்தில் பிடிக்கப்பட்ட உடும்பை சில மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் வாழ்விடத்தில் பத்திரமாக விடப்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தில்லி தலைமைச் செயலகத்தில் 3.5 அடி நீள நாகப் பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.