காஜியாபாத் அருகே சப்ரெளலு கிராமத்தில் பணத் தகராறில் இளைஞர் ஒருவரை அவரது நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
கெளதம் புத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (28). கோத்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் குப்தா. இருவரும் நண்பர்கள். இந்நிலையில், சந்தீப்புக்கு குப்தா ரூ.40,000 கடன் கொடுத்திருந்தாராம்.
இதை வாங்குவதற்காக சந்தீப்பின் வீட்டுக்கு குப்தா வியாழக்கிழமை சென்றார். அப்போது பணத்தை திருப்பி அளிக்குமாறு கேட்ட போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சந்தீப்பை குப்தா கத்தியால் குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயமடைந்த சந்தீப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமறைவான குப்தாவை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.