அரசு மருத்துவமனை ஊழியர்கள் தாக்கி இளைஞர் இறந்ததாகப் புகார்

தென் மேற்கு தில்லியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் தாக்கியதில் இளைஞர் இறந்ததாக அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

தென் மேற்கு தில்லியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் தாக்கியதில் இளைஞர் இறந்ததாக அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தென்மேற்கு தில்லி பகுதியைச் சேர்ந்தவர் சோனு (32). இவரது மனைவி ராதிகா. இவருக்கு சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், சிகிச்சைக்காக ஜாஃப்பர்பூர் காலன் பகுதியில் உள்ள ராவ் துலா ராம் (ஆர்டிஆர்) மருத்துவமனைக்கு அவரது கணவர் சோனு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் ராதிகாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அதிருப்தி அடைந்து மருத்துவர்களிடம் சோனு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் சோனுவை தாக்கியதாகவும், இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்ததாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து சோனுவின் மனைவி ராதிகா கூறுகையில், "மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் எனது கணவர் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, அவரை மருத்துவமனை ஊழியர்கள் திட்டினர். 
மேலும், அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று அவரைக் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் மயங்கிவிழுந்தார். இதன்பின்னர், கணவருடன் வீட்டுக்கு திரும்பினேன். அப்போது, அவருக்கு உடல் வலி அதிகமானதால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்றேன். ஆனால், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். மேற்கு தில்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். எனது குடும்பம் கணவரின் வருவாயை நம்பித்தான் இருந்தது. தற்போது, அவர் இறந்துவிட்டதால் என்னையும், எனது இரு குழந்தைகளையும் காப்பாற்ற யாரும் இல்லை' என்றார்.
இது குறித்து துவாரகா கூடுதல் காவல் துணை ஆணையர் சந்தோஷ் குமார் மீனா கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.
ஆர்டிஆர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சங்கீதா பாசு கூறுகையில், "சோனுவை மருத்துவமனை ஊழியர்கள் தாக்கவில்லை. மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, அதுபோன்று தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com