தென் கிழக்கு தில்லியில் புதன்கிழமை அதிகாலை சொகுசு வாகனமும் காரும் மோதிக் கொண்ட தில் காரில் பயணம் செய்த தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லியைச் சேர்ந்தவர் திரிலோக் சந்த். இவர் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாய்க்கிழமை இரவு தில்லியில் உள்ள ஒரு பகுதிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்து புதன்கிழமை அதிகாலை காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஜெய்த்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சொகுசு வாகனமும், காரும் மோதிக் கொண்டன.
இதில், கார் நொறுங்கியது. மேலும், காரில் தீப்பற்றியதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தில்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திரிலோக் சந்த், அவரது மகன் விகாஷ் திவாரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.