ஆம் ஆத்மி அரசு தில்லியியின் வளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டது என பாஜக விமர்ச்சித்துள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் 3 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள அமைச்ர் சத்யேந்தர் ஜெயினை பதவி விலகக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தில்லியின் வளர்ச்சியை 30 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஆம் ஆத்மி அரசில் ஊழல் மலிந்துவிட்டது. அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி அமைச்சர்கள் ஊழல் புரிந்து வருகின்றனர். வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தில்லியில் ஆட்சி பொறுப்பேற்று 3-ஆம் ஆண்டு நிறைவு விழாவை, முதல்வர் கேஜரிவால், மக்களுடன் கொண்டாடாமல், அமைச்சரவை சகாக்களுடன் கொண்டாடி வருகிறார் என்றார் அவர்.
தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா பேசுகையில், "பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துள்ளது' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர்கள் குல்ஜீத் சிங், ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பாடியா, துணைத் தலைவர்கள் மோகன் சிங், ராஜீவ் பப்பர், அபய் வர்மா, மோனிகா பன்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.