வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளிகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என்று அந்த மாநகராட்சி இயக்குநர் (கல்வி) ஏ.கே.ஹெம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மாநகராட்சி தலைமையிடம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் வியாழக்கிழமை நடைபெற்ற என்டிஎம்சி பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி இயக்குநர் (கல்வி) ஏ.கே.ஹெம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் பராமரிப்பு நிதியை செலவு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வழிமுறைகள் தொடர்பாக பேசப்பட்டது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் போது, சிறப்புப் பயிற்சி முகாமை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.