தில்லி மாநகராட்சிகளில் உள்ள தில்லி அரசுக்குச் சொந்தமான சாலைகளை முறைப்படி அறிவிக்கை செய்யாமல் வேண்டுமென்றே தில்லி அரசு தாமதம் காட்டுவதாக மாநகராட்சி மேயர்கள் குற்றம்சாட்டினர்.
தில்லியில் உள்ள சாலைகளை அறிவிக்கை செய்வது தொடர்பாக, தில்லி பொதுப் பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் மாநகராட்சி மேயர்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநகராட்சி மேயர்கள், சாலைகளை அறிவிக்கை செய்யும் விவகாரம் தொடர்பாக தில்லி அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டினர்.
தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத்: "தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தில்லி அரசுக்குச் சொந்தமான 351 சாலைகளை அறிவிக்கை செய்வதில் தில்லி அரசு அக்கறை காட்டவில்லை. இது தொடர்பாக நாங்கள் எழுதிய கடிதங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. மேலும், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இதன் மூலம் தனது கடமையில் இருந்து தில்லி அரசு தவறுகிறது'.
வடக்கு தில்லி மேயர் ப்ரீத்தி அகர்வால்: "சாலைகளைஅறிவிக்கை செய்யத் தாமதம் காட்டுவதால், வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு தில்லியில் 156 சாலைகள் இன்னமும் அறிவிக்கை செய்யப்படாமல் உள்ளன. இவை அறிவிக்கை செய்யப்பட்டால் மட்டுமே இச் சாலையோரங்களில் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இந்த விவகாரத்தில் தில்லி அரசு நாடகமாடுகிறது. இது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்துக்கு மாகராட்சி பதில் அளிக்கவில்லை என்று அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். அவர் எழுதிய அனைத்துக் கடிதங்களுக்கும் நாங்கள் பதில் அனுப்பியுள்ளோம். வணிகர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்த விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது'.
கிழக்கு தில்லி மேயர் நீமா பகத்: "சாலைகள் அறிவிக்கை செய்யப்படாததால்தான் வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படுகின்றன. சாலைகளை முறையாக அறிவிக்கை செய்தால் வணிக வளாகங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அப்போது சீல் வைக்கப்படுவதில் இருந்து பெரும்பாலான வணிக வளாகங்கள் தப்பும்'.