வணிக வளாகங்களுக்கான உருமாற்றக் கட்டணம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் திலீப் பாண்டே தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் தெரிவித்துள்ளார்.
தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்களுக்கான உருமாற்றக் கட்டணம் ரூ.17 கோடி அண்மையில் வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தை வசூலிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை எனவும், மாநகராட்சி சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணம் வசூலிப்பதாகவும் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் திலீப் பாண்டே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது இக்குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என்று மேயர் கமல்ஜீத் ஷெராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் கமல்ஜீத் ஷெராவத் சனிக்கிழமை கூறியதாவது:
வணிகர்களிடம் இருந்து உருமாற்றக் கட்டணங்கள் சட்டத்துக்கு உள்பட்ட வகையிலேயே வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் அவர்களாகவே முன்வந்து பணத்தை செலுத்தியுள்ளனர் என்பதை மறந்து விட்டு திலீப் பாண்டே பேசுகிறார்.
பணம் செலுத்திய வணிகர்கள் சீல் நடவடிக்கைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர். தெற்கு தில்லி மாநகராட்சியில் உள்ள சாலைகளை முறையாக அறிவிக்கை செய்யாத ஆம் ஆத்மி அரசே வணிக வளாகங்கள் சீல் வைப்பதற்கு முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.