தில்லி பாஜகவின் பூர்வாஞ்சல் பிரிவு சார்பில் மகர சங்கராந்தியும், போஜ்புரி கலாசார விழாவும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) கொண்டாடப்படவுள்ளது.
இந்த ஆண்டு மகர சங்கராந்தி விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் போஜ்புரி கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் உள்ள தால்கடோரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், கேசவ் பிரசாத் மயூரா, கிரிராஜ் சிங், சுசில் குமார் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் மற்றும் பிகார், உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பாஜகவின் பூர்வாஞ்சல் மோர்ச்சாவின் தலைவர் மனீஷ் சிங் கூறுகையில், "இந்த விழாவில் 15,000 அதிகமான பூர்வாஞ்சல் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்வாஞ்சல் பகுதியில் சங்கராந்தி எப்படிக் கொண்டாடப்படுமோ அதேபோன்று இங்கேயும் கொண்டாடப்படவுள்ளது. போஜ்புரி நடிகர்கள் கேசாரி லால் யாதவ், டிம்பிள் சிங், அஞ்சு ஜா, விகாஷ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்' என்றார்.