உன்னாவ், கதுவா பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு நீதி கேட்டு தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் விஷ்வ வித்யாலயா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விஜய் நகர் வரை திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். இறுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணியில் தில்லி பல்கலை., ஜேஎன்யு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி குறித்து அகில இந்திய மாணவர் சங்கத்தின் தில்லி பல்கலைக் கழகப் பிரிவுத் தலைவர் கவல்பிரீத் கெளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. பெண்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத தேசமாக இந்தியா மாறியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினரைக் காப்பாற்றும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டது வெட்கக் கேடானது' என்றார்.
அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஜேஎன்யு பிரிவுத் துணைத் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், "பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். உன்னாவ், கதுவா சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட பாஜகவினர் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.