உலகத் தலைவர்களின் பூமி இந்தியா என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பெருமிதம் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றபோது அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:
இந்தியா, நினைவுக்கெட்டாத பழங்காலங்களில் இருந்தே உலகத் தலைவர்களின் பூமியாக இருந்து வருகிறது.
அறிவியல், மருத்துவம், கட்டடக் கலை, சட்டம் என எந்தவொரு துறைகளின் வரலாற்றைப் புரட்டினாலும் நாம் உலகத் தலைவர்களாக இருந்தது தெரியும்.
மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள துறைகளில், எல்லைகளைக் கடந்து பரந்த அளவில் சிந்திக்க வேண்டும். மேலும், சமூகத்துக்கும் அவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த சுமார் 4,000 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், மணிப்பூர் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான நஜ்மா ஹெப்துல்லா கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் தலத் அகமது, "பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது தேசமெங்கிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 18,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்' என்றார்.