தில்லியில் பெட்ரோல் நிலைய (பம்ப்) ஊழியர் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து வடமேற்கு மாவட்டக் காவல் துணை ஆணையர் அஸ்லம் கான் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
தில்லி, ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பம்பில் நரேஷ் (21) என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பெட்ரோல் பம்ப் அருகே உள்ள போக்குவரத்து மையத்தில் கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு நரேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து புகாரின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்படையினர் பல்வேறு பகுதிகளிலும் துப்பு சேகரித்து வந்தனர். இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த விஷால் சங்கர் (23), நிகில் சக்ஷேனா (19), புனீத் (24) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் நரேஷை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டதாக காவல் துணை ஆணையர் அஸ்லம் கான் தெரிவித்தார்.