போலி விமான டிக்கெட் மூலம் தில்லி விமான நிலையத்திற்குள் நுழைந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்ணை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) பிடித்து தில்லி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தில்லி விமான நிலைய சிஐஎஸ்எஃப் அதிகாரி கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் சம்பவத்தன்று வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்றாவது முனையப் பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பெண்ணிடம் சிஐஎஸ்எஃப் வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர் ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கே. ஷக்ஸோடா என்பதும் தெரிய வந்தது. தாஸ்கண்ட் செல்லும் தனது தாயை வழியனுப்புவதற்காக விமான நிலைய முனையத்திற்குள் சென்றதாகக் கூறினார். அவர் போலி டிக்கெட் வைத்திருந்ததால் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.