வடமேற்கு தில்லியில் மேம்பாட்டுப் பணிகளில் அலட்சியம் காட்டும் என்டிஎம்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் உதித் ராஜ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த 2014- ஆம் ஆண்டில் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றேன். பதவியேற்றதில் இருந்து எனது தொகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கûளைக் கொண்டு வந்துள்ளேன். ஆனால், தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதற்கு என்டிஎம்சி அதிகாரிகள் தடையாக உள்ளனர். ரோஹிணி பகுதியில் ரூ.35 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் 2015 -இல் தொடங்கப்பட்டன. இதேபோல, ரூ.65 கோடியில் கேவ்ரா கிராமம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகளும் 2015-இல் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன.
இது தொடர்பாக விசாரித்த போது, நகர்ப்புற வளர்சி அமைச்சகம் இந்தத் திட்டங்களுக்கு தடைபோடுவதாக என்டிஎம்சி அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்திடம் பேசி அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தேன். எனினும், அந்த மேம்பாட்டுப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையில், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. செயல்படாமல் உள்ள என்டிஎம்சி அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மக்கள் பணியாற்ற தகுதியில்லாதவர்கள். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.