வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருத்துகள் கடத்தியதாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள், பல்வேறு வகையிலான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்பு துறையினர் கூறியதாவது:
மேற்கு படேல் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக மருந்துகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.
அப்போது அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் 41,005 மாத்திரைகளும், 2.4 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையிலான மாத்திரைகளும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு கூரியரில் அனுப்ப இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இணையதள உதவியுடன் இவர்கள் சர்வதேச அளவில் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாகன உபரி பொருள்களிலும், மத சம்பந்தமான பொருள்களிலும் அடைத்து வைத்து அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.