தில்லி மாநகராட்சிகளின் நிதி நெருக்கடி: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்றால், மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்க கேட்டுக் கொள்ளப்படும்

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்றால், மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்க கேட்டுக் கொள்ளப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.
தில்லி மாநகராட்சி ஊழியர்களின் ஊதிய நிலுவை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லி மாநகராட்சிகள் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், "4-வது தில்லி நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநகராட்சிகளுக்கு அளிக்க வேண்டிய நிதியை தில்லி அரசு ஒதுக்கவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் முதல் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை' என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "4-வது தில்லி நிதி ஆணையத்தின் பரிந்துரைகளையும், தில்லி மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் தில்லி அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 4-வது தில்லி நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை தில்லி துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அதன் மீது பதில் பெற வேண்டும். 
தில்லி மாநகராட்சிகள் தங்களுக்கு நிதி கோரி புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு அளிக்கும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com